குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட காந்தியடிகளின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி மறுப்பு தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுவான வேட்பாளரை நிறுத்த முடிவு செய்யப்பட்ட நிலையில், தன்னை விட சிறப்பு வாய்ந்த ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகளுக்கு கோபாலகிருஷ்ண காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த மம்தா ஏற்பாடு செய்த எதிர்க்கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும், பொது வேட்பாளர் யார் என்பது குறித்து இறுதி முடிவு செய்யும் பணிகளில் எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
அந்தவகையில், பொதுவேட்பாளராக போட்டியிட பரிந்துரைக்கப்பட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா ஆகியோர் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட மறுப்பு தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து காந்தியடிகளின் பேரனும் மேற்கு வங்க முன்னாள் ஆளுநருமான கோபாலகிருஷ்ண காந்தியை பொதுவான வேட்பாளராக நிறுத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்தன. எனினும் அவர் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு தற்போது மறுப்பு தெரிவித்துள்ளார்.
இவர் இதற்கு முன்பு கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.