/

மும்பையில் அடுக்குமாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி

இதில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் இதுவரை 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.

News image
மும்பையில் அடுக்குமாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி
Updated On :28 ஜூன் 2022, 7:06 am

DIN


மும்பை: மும்பையில் அடுக்குமாடிக் கட்டடம் சரிந்து விழுந்ததில் 2 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் இதுவரை 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.

நள்ளிரவு முதல் நடைபெற்று வரும் மீட்புப் பணியில், 28 மற்றும் 30 வயது மதிக்கத்தக்க இரண்டு ஆண்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது, இருவரும் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் கட்டட இடிபாடுகளில் 10க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. கட்டட இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் நள்ளிரவு முதல் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

குர்லா அருகே நாயக் நகர் பகுதியில் அமைந்திருந்த அடுக்குமாடி குடியிருப்புப் கட்டடம் நள்ளிரவில் இடிந்துவிழுந்து விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

கட்டட இடிபாடுகளில் 20 முதல் 22க்கும் மேற்பட்டவர்கள் சிக்கியிருக்கக் கூடும் என்று அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். இதில் இதுவரை 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். ஏராளமான தீயணைப்பு வீரர்கள், மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு வாகனங்களும், நவீன கருவிகளும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.