ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: வேதாந்தா நிறுவன மனு மீது மார்ச் 15-இல் விசாரணை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுக்கள் வரும் மார்ச் 15-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: வேதாந்தா நிறுவன மனு மீது மார்ச் 15-இல் விசாரணை
Published on
Updated on
1 min read

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுக்கள் வரும் மார்ச் 15-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளது.
 சுற்றுச்சூழல் விதிகளை மீறியதாகக் கூறி, தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு 2018-ஆம் ஆண்டில் உத்தரவிட்டது.
 இதையடுத்து, ஆலை நிர்வாகத்தின் தரப்பில் 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆலையை மூடுவதற்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்திருந்த உத்தரவை உறுதி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
 இதனிடையே, கடந்த ஆண்டு கரோனா நோய்த்தொற்று தீவிரமாக இருந்தபோது, நாடு முழுவதும் பரவலாக ஆக்சிஜன் நெருக்கடி ஏற்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் மையத்தில் ஆக்சிஜனை மட்டும் உற்பத்தி செய்வதற்கு கடந்த ஆண்டு ஏப்ரல் 27 முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன் பிறகு, ஆலையில் தொடர்ந்து ஆக்சிஜன் உற்பத்தியை மேற்கொள்வதற்கு வேதாந்தா நிறுவனம் தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
 இதைத் தொடர்ந்து, ஆலையில் பராமரிப்புப் பணியை மேற்கொள்வதற்கு அனுமதி கோரி வேதாந்தா நிறுவனத்தின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
 மேலும், மழைக்காலத்தின் போது ஆலையில் உள்ள இயந்திரப் பகுதியில் மழைநீர் சூழ்ந்ததால், இயந்திரங்கள் பாதிக்கப்படும் சூழல் இருப்பதாகக் கூறி மேல்முறையீட்டு மனு, இடைக்கால மனு ஆகியவற்றை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று கேட்டு மற்றொரு புதிய மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் வரும் 15-ஆம் தேதி விசாரணைக்கு தோராயமாக பட்டியலிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதி டி .ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் மூத்த வழக்குரைஞர் அரிமா சுந்தரம் புதன்கிழமை ஆஜராகி மார்ச் 15-ஆம் தேதி பட்டியலிடப்பட்டுள்ள வேதாந்தா மனுக்கள் மீது அன்றைய தினம் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
 அப்போது நீதிபதி அமர்வு, சம்பந்தப்பட்ட மனு மீது அன்றைய தினம் விசாரிக்கப்படும் என்று கூறியது. தமிழக அரசின் தரப்பில் வழக்குரைஞர் டி. குமணன் ஆஜராகியிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com