'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படத்தைப் பார்ப்பதற்காக அரசு ஊழியர்களுக்கு அரை நாள் விடுப்பு வழங்கியுள்ளது அசாம் அரசு.
'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' என்ற ஹிந்தி திரைப்படம் கடந்த மார்ச் 11 ஆம் தேதி வெளியானது. 1990ல் காஷ்மீரில் ஏற்பட்ட கிளர்ச்சியில் காஷ்மீர் இந்துக்கள் வெளியேற்றப்பட்டது, பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளால் காஷ்மீர் இந்து சமூகத்தைச் சேர்ந்த மக்கள் கொல்லப்பட்டதை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. விவேக் அக்னிஹோத்ரி இதனை எழுதி இயக்கியிருக்கிறார். அனுபம் கெர், தர்ஷன் குமார், மிதுன் சக்கரபோர்த்தி, பல்லவி ஜோஷி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படக்குழுவினரை வரவழைத்து பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். மேலும் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாஜக கூட்டத்திலும் உண்மையை எடுத்துரைக்கும் இதுபோன்ற படங்கள் அதிகம் வர வேண்டும் என்று மோடி கூறியிருந்தார்.
தொடர்ந்து பாஜக அமைச்சர்கள் மற்றும் கட்சியினர் இப்படத்தை பாராட்டி வருகின்றனர். மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு அழுததாகத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அசாமில் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்தைப் பார்ப்பதற்காக அரசு ஊழியர்களுக்கு அரை நாள் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, 'இந்த அரை நாள் விடுப்பு வேண்டுவோர், உங்களது மூத்த அதிகாரிகளிடம் சினிமா டிக்கெட் நகலை வழங்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்களுடன் முதல்வர் இந்த படத்தைப் பார்த்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக ஷர்மா தனது ட்விட்டர் பக்கத்தில், 'காஷ்மீரி பண்டிட் இனப்படுகொலை மற்றும் அவர்களின் வெளியேற்றம் மனிதகுலத்தின் மீதான ஒரு கறை.
எனது அமைச்சரவை சகாக்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் சேர்ந்து நான் பார்த்தேன். அவர்களின் அவல நிலை மனதில் நிறுத்தும் வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளது. உண்மையை வெளிக்கொண்டு வந்ததற்கு இயக்குநருக்கு பாராட்டுகள்' என்று குறிப்பிட்டுள்ளார்.
பாஜக ஆளும் ஹரியாணா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், குஜராத், கோவா உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் இந்த படம் முழு வரி விலக்கு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.