உத்தரகண்ட் மாநில முன்னாள் ஆளுநர் பேபி ராணி மௌரியா உ.பி. அமைச்சராக இன்று பதவியேற்றுக்கொண்டார்.
403 தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில், பாஜக 255 இடங்களிலும் அதன் கூட்டணிக் கட்சிகள் 18 இடங்களிலும் வெற்றி பெற்றன. இந்த நிலையில் தலைநகா் லக்னௌவில் உள்ள வாஜ்பாய் இகானா விளையாட்டரங்கில் இன்று நடந்த பதவியேற்பு விழாவில் உத்தரப் பிரதேச மாநில முதல்வராக யோகி ஆதித்யநாத் 2-வது முறையாக பதவியேற்றுக் கொண்டார்.
இதையும் படிக்க- துபையில் தமிழ்நாடு அரங்கைத் திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆளுநர் ஆனந்தி பென் படேல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். துணை முதல்வர்களாக கேசவ் பிராசத் மவுரியா மற்றும் பிரஜேஷ் பதக் ஆகியோர் பதவியேற்றனர். இன்று நடந்த பதவியேற்பு விழாவில் யோகி ஆதித்யநாத் உள்பட மொத்தம் 52 அமைச்சர்கள் பதவியேற்றனர். அதில் 5 பெண் அமைச்சர்கள் அடங்குவர். பதவியேற்ற 5 பெண் அமைச்சர்களில் உத்தரகண்ட் மாநில முன்னாள் ஆளுநர் பேபி மௌரியாவும் ஒருவர்.
மௌரியா ஆக்ராவின் முதல் பெண் மேயராகவும் பதவிவகித்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் ஆக்ரா ஊரக சட்டப்பேரவைத் தொகுதியில் பேபி ராணி மௌரியா போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.