தில்லியில் தொடர்ந்து வெப்பம் அதிகரித்து வருவதால் அங்குள்ள தேசிய உயிரியல் பூங்காவில் வனவிலங்குகளுக்கு வெப்பத்தை தணிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தில்லி உயிரியல் பூங்காவில் விலங்குகளுக்காக நீர் தெளிப்பான்கள், ஐஸ்கட்டி படுக்கைகள் மற்றும் குளிர்விப்பான்கள் போன்ற வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அந்த உயிரியல் பூங்காவின் இயக்குநர் தர்ம்தியோ ராய் கூறியதாவது, ” விலங்குகளை வெப்பத்தில் இருந்து பாதுகாக்க பல்வேறு வசதிகளை செய்துள்ளோம். நிழலுக்காக அதிக அளவில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அவை அதிகரிக்கும் வெப்பத்திலிருந்து விலங்குகளை பாதுகாக்கும். விலகுங்கள் குளிப்பதற்காக சிறிய குளங்கள் உள்ளன. மான்களை நீர்நிலைக்கு அருகில் பார்க்கலாம். நிலப்பரப்பில் அவற்றிற்கு வெப்பத்தை தணிப்பதற்காக நீர் தெளிப்பான்கள் பொருத்தப்பட்டுள்ளன.
வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் போது கரடிகள் தங்களை குளிர்வித்துக் கொள்ளும் பொருட்டு ஐஸ்கட்டி படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் கரடிகள் உடல் வெப்பத்தை தணிக்க அதிக ஆர்வம் காட்டுகின்றன. இதைத் தவிர வெப்பத்தை தணிப்பதற்காக நாள் முழுவதும் இயங்கும் குளிர்விப்பான்கள் பூங்காவில் பொருத்தப்பட்டுள்ளது. யானைகள் நீராடுவதற்காக மழைத்தாரை ( shower) வசதி அமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு உயிரியல் பூங்காவும் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி விலங்களுக்கான உணவுமுறைகளையும் சரியாக பின்பற்றி வருகிறது. தில்லி உயிரியல் பூங்காவில் தற்போது ஏறக்குறைய 1,100 விலங்குகள் உள்ளது” என்றார்.