ஷ்ரத்தா கொலை வழக்கில் குற்றவாளிக்கு உண்மை கண்டறியும் சோதனை (நார்கோ பரிசோதனை) நடத்த தில்லி உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி 5 நாள்கள் அவகாசம் அளித்துள்ளது.
ஷ்ரத்தாவைக் கொடூரமாகக் கொன்ற அஃப்தாப் அமீனின் செல்போன், மடிக்கணினி, கேமரா போன்றவற்றை தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மும்பையைச் சேர்ந்த கால்சென்டர் ஊழியரான ஷ்ரத்தா, அஃப்தாப் பூனாவாலா என்பவருடன் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்துள்ளார். அவர்களிடையே அடிக்கடி சண்டைகள் எழுந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே கடந்த மே மாதம் ஷ்ரத்தாவை அஃப்தாப் கொடூரமான முறையில் கொன்றுள்ளார்.
தனது மகளைக் காணவில்லை என ஷ்ரத்தாவின் தந்தை அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர். அஃப்தாபை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
ஆரம்பத்தில் சந்தேகத்திற்கு இடமின்றி நடந்துகொண்ட அஃப்தாபிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையில் பல உண்மைகள் வெளிவந்தன.
ஷ்ரத்தாவைக் கொன்று உடலை 35 பாகங்களாக வெட்டி பல்வேறு இடங்களில் வீசியதாகவும், உடல் பாகங்களை குளிர்பதனப் பெட்டியில் வைத்து பாதுகாத்து வந்ததாகவும், அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக ஷ்ரத்தாவின் தலையை எரித்ததாகவும் வாக்குமூலத்தில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக தில்லி உயர்நீதிமன்றம் இன்று முக்கியமான உத்தரவை பிறப்பித்துள்ளது. விசாரணையின்போது குற்றவாளியான அஃப்தாப் காவல் துறையினரை திசைமாற்றும் வகையில், முரணான பதில்களை அளித்துள்ளார்.
ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பதில்களை அளித்ததால், காவல் துறையினர் விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில், குற்றவாளி அஃப்தாபிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தில்லி உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும், 5 நாள்களுக்குள் விசாரணையை அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
தில்லி காவல் துறையினர், அஃப்தாப் தங்கியிருந்த அறையிலிருந்து மடிக்கணினி, செல்போன், கேமரா உள்ளிட்டவற்றைக் கைப்பற்றியுள்ளனர். தடயவியல் சோதனை மூலம் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. செல்போனில் சைபர் கிரைம் உதவியுடன் வேறு யாருடன் அஃப்தாப் தொடர்பில் இருந்தார் எனற கோணத்தில் விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
உண்மை கண்டறியும் பரிசோதனை என்றால் என்ன?
நார்கோ சோதனை உண்மை கண்டறியும் சோதனை எனப்படும். இந்த சோதனையில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு மயக்க மருந்து செலுத்தி கற்பனைத் திறனை மட்டுப்படுத்தி அரை மயக்க நிலைக்கு கொண்டுவந்து, அவரிடம் விசாரணை நடத்தப்படும். வழக்கு குறித்த கேள்வியோ, வாக்குமூலமோ இந்த முறையில் பெருவதன் மூலம் பெரும்பாலும் உண்மை சம்பவம் வெளிவரும். கண்டுபிடிக்கப்படாத ரகசியங்கள் இந்த முறையைப் பயன்படுத்தி கண்டறியப்படும்.