இந்தியாவில் சுயதொழில் தொடங்குபவர்களின் எண்ணிக்கை கடந்த 2014ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் பெருமளவு அதிகரித்துள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
கடந்த 2014ஆம் ஆண்டுக்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நூற்றுக்கணக்கில் இருந்த சுயதொழில் தொடங்குவோர் எண்ணிக்கை, தற்போது 70 ஆயிரத்தைக் கடந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
கர்நாடக மாநிலம் உடுப்பியில், கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து அவர் பேசியதாவது, ஆரம்பத்தில் நம் நாட்டில் சுயதொழில் மீதான நாட்டம் குறைவாகவே இருந்தது. ஆனால், கடந்த 7 - 8 ஆண்டுகளில் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. 2014ஆம் ஆண்டுக்கு முன்பு சுயதொழில் தொடங்குவோர் எண்ணிக்கை நூறுக்கும் குறைவாகவே இருந்தது. ஆனால், தற்போது அது 70 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அந்த வெற்றிக் கதை உங்களைப்போன்ற இளைஞர்களால்தான் சாத்தியமாகியுள்ளது.
அறிவியல் தொழில்நுட்பத்தில் இந்தியா முதல் நிலையில் இருந்தது. பூஜ்ஜியத்தைக் கண்டறிந்தது, இருநிலை சமன்பாட்டை கண்டுபிடித்தது என பெரும் மாற்றங்களுக்கு வித்திட்டவைகளை இந்தியா வழங்கியுள்ளது.
கல்வியைப் பற்றி பேசும்போது செய்முறை (பிராக்டிகல்ஸ்) மற்றும் எழுத்துத்தேர்வு என இரண்டையும் கருத்தில் கொள்ள வேண்டும். நமக்கு அறிவு மட்டுமல்ல, ஞானமும் படைத்தவர்கள் இந்தியர்கள். வறுமைக்கும், வேலைவாய்ப்பின்மைக்கும் கல்வியறிவே காரணம் எனக் குறிப்பிட்டார்.