
உயரத்திலிருந்து விழுவதே 12 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் இறப்பதற்கு அதிக அளவில் காரணமாக இருப்பதாக தில்லி எய்ம்ஸ் மருத்துவனை ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது: 12 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் இறப்பதற்கு வீடுகளில் உள்ள பால்கனி போன்ற உயரமான இடங்களில் இருந்து விழுவதே காரணமாக உள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு 3 நிமிடத்துக்கும் ஒருவர் தலையில் ஏற்படும் காயம் காரணமாக உயிரிழக்கிறார். அதிலும் குறிப்பாக, இது போன்று தலையில் ஏற்படும் காயங்கள் 30 சதவிகிதம் குழந்தைகளிடத்தில் காணப்படுகிறது. குழந்தைகளுக்கு தலையில் ஏற்படும் காயங்கள் 60 சதவிகிதம், உயரத்தில் இருந்து விழுவதாலேயே ஏற்படுகின்றன.
இதையும் படிக்க: தோனிதான் என்னை சமாதானப்படுத்தினார்: ஷுப்மன் கில் நெகிழ்ச்சி
இதனை தடுப்பதற்காக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில், “பாதுகாப்பான பால்கனி , பாதுகாப்பான குழந்தைகள்” என்ற விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் 1000 குழந்தைகளின் தரவுகள் சேகரிக்கப்பட்டு ஆய்விற்கு உட்படுத்தப்பட்டது. அவர்கள் உயரத்திலிருந்து விழுந்ததே மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு காரணமாக இருந்தது. அதிலும், பெண் குழந்தைகளைக் காட்டிலும் ஆண் குழந்தைகளே இந்த காரணங்களினால் மருத்துவமனையில் அதிக அளவில் சேர்க்கப்படுகின்றனர்.
இந்த குழந்தைகளின் குடும்பம் சமூகப் பொருளாதார நிலையில் பின் தங்கி காணப்படுகிறது. இதுபோன்ற குழந்தைகள் விபத்தில் சிக்கும்போது பெற்றோர் வீட்டில் இல்லாததும் ஒரு காரணமாக உள்ளது. இந்த விபத்துகளைத் தடுக்க குழந்தைகளின் உயரத்தைக் காட்டிலும் பால்கனியின் உயரம் இருமடங்கு இருக்குமாறு அமைக்க வேண்டும். இந்த பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரத்தில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவத் துறையைச் சேர்ந்த பணியாளர்கள் பலரும் கருத்தரங்குகள் மற்றும் போட்டிகள் நடத்த உள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.