
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் 6 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ததற்கு எதிராக காங்கிரஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த ஆறு பேரையும் அரசமைப்புச் சட்டப் பிரிவு 142-இன் கீழ் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, நளினி, ரவிச்சந்திரன், ஸ்ரீஹரன் என்கிற முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இதில் நளினி, ரவிச்சந்திரன் தவிர மற்ற நால்வரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள்.
இதையடுத்து, உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கில் மத்திய அரசின் வாதங்களை முன்வைக்க போதிய வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்றும், இந்த வழக்கில் முழுமையான நீதி வழங்க ஏதுவாக சில ஆதாரங்களை முன்வைக்க அனுமதிக்க வேண்டும் என்றும் மறுஆய்வு மனுவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை முன்கூட்டியே விடுதலை செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.