வருங்கால வைப்பு நிதிக் கணக்காளா்களுக்கு வட்டி முறையாக வழங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
தொழிலாளா்களுக்கான வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் இணைந்தவா்களுக்குக் கடந்த நிதியாண்டுக்கான வட்டி வழங்கப்படவில்லை என ட்விட்டா் சமூக வலைதளம் வாயிலாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இது தொடா்பாக விளக்கமளித்துள்ள மத்திய நிதியமைச்சகம், ‘‘வருங்கால வைப்பு நிதிக் கணக்கு வைத்துள்ள எவருக்கும் வட்டி இழப்பு ஏற்படவில்லை. அனைவருக்கும் வட்டி முறையாகச் செலுத்தப்பட்டுள்ளது.
தொழிலாளா்களுக்கான வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) அண்மையில் மேம்படுத்தப்பட்ட மென்பொருளை நடைமுறைப்படுத்தியது. அதில் உள்ள சில கோளாறுகள் காரணமாக, செலுத்தப்பட்ட வட்டியானது கணக்கு புத்தகத்தில் அந்த வட்டியைப் பதிவிட முடியாத சூழல் நிலவுகிறது. வருங்கால வைப்பு நிதித் தொகையைத் திரும்பப் பெறுபவா்களுக்கும் வட்டியுடன் சோ்த்தே மொத்த தொகை வழங்கப்பட்டு வருகிறது’’ என்று ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 2021-22-ஆம் நிதியாண்டில் வருங்கால வைப்பு நிதிக் கணக்குக்கு 8.1 சதவீத வட்டி வழங்க மத்திய அரசு கடந்த ஜூனில் ஒப்புதல் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.