பிரிட்டன் பிரதமரானதற்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு ரிஷி சுனக் நன்றி தெரிவித்துள்ளார்.
பிரிட்டனை ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பிரிட்டன் பிரதமராக அவர் செவ்வாய்க்கிழமை பதவியேற்றார்.
பிரிட்டனின் பிரதமராகியுள்ளதன் மூலம் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த முன்னாள் நிதியமைச்சா் ரிஷி சுனக் (42) வெள்ளை இனத்தைச் சேராத முதல் பிரதமா், முதல் ஹிந்து பிரதமா் என்ற பெருமைகளை பெற்றுள்ளாா்.
அது மட்டுமன்றி, பிரிட்டன் வரலாற்றில் 210 ஆண்டுகளுக்குப் பிறகு மிக இளைய வயதில் பிரதமராகப் பொறுப்பேற்பவா் என்ற சாதனையையும் ரிஷி சுனக் பதிவு செய்துள்ளாா்.
இதையும் படிக்க | எப்படிப்பட்ட பிரிட்டனை உருவாக்குகிறேன் பாருங்கள்! ரிஷி சுனக்
இதையடுத்து பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கிற்கு உலக நாடுகள் பலவும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடியும் ரிஷி சுனக்கிற்கு வாழ்த்துத் தெரிவித்தார்.
இதற்கு நன்றி தெரிவித்து பதில் அளித்துள்ள ரிஷி சுனக், 'என் புதிய அத்தியாயத்தை தொடங்கும்போது உங்களின் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி.
பிரிட்டனும் இந்தியாவும் அதிகம் பகிர்ந்து கொள்கின்றன. வரவிருக்கும் மாதங்கள், ஆண்டுகளில் நமது பாதுகாப்பு, ராணுவம் மற்றும் பொருளாதார கூட்டாண்மையை ஆழப்படுத்துவதால், இரண்டு பெரிய ஜனநாயக நாடுகளும் என்னவெல்லாம் அடைய முடியும் என்பதை நினைத்து உற்சாகமடைகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.