
நாடு முழுவதும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டுதல், ஆள் சேர்த்தல், பயிற்சி நடத்துதல் உள்ளிட்ட புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத்துறை இணைந்து தமிழகம் உள்பட 11 மாநிலங்களில் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஆந்திரா (5), அசாம் (9), டெல்லி (3), கர்நாடகம் (20), கேரளம் (22), மத்தியப் பிரதேசம் (4), மகாராஷ்டிரம் (20), புதுச்சேரி (3) , ராஜஸ்தான் (2), தமிழ்நாடு (10) மற்றும் உத்தரப் பிரதேசம் (8) ஆகிய மாநிலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சோதனைக் குழுவினரால் பல குற்ற ஆவணங்கள், 100-க்கும் மேற்பட்ட செல்லிடைபேசிகள், மடிக்கணினிகள் மற்றும் பிற பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா, எஸ்டிபிஐ நிர்வாகிகளின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர், என்ஐஏ இயக்குநர், உள்துறை செயலாளருடன் அமித் ஷா முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.