மாவட்டச் செயலாளர் பதவியை நண்பருக்கு விட்டுக்கொடுத்த எடப்பாடி பழனிசாமி: பின்னணி தகவல்கள் என்ன?

சேலம் மாவட்டச் செயலாளர் பதவியை நெருங்கிய ஆதரவாளரான இளங்கோவனுக்கு விட்டுக்கொடுத்தார் எடப்பாடி பழனிசாமி. 
மாவட்டச் செயலாளர் பதவியை நண்பருக்கு விட்டுக்கொடுத்த எடப்பாடி பழனிசாமி: பின்னணி தகவல்கள் என்ன?

சேலம்: சேலம் மாவட்டச் செயலாளர் பதவியை நெருங்கிய ஆதரவாளரான இளங்கோவனுக்கு விட்டுக்கொடுத்தார் எடப்பாடி பழனிசாமி.கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விசாரணை வளையத்திற்குள் இளங்கோவன் உள்ள நிலையில், அவருக்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகம் முழுவதும் அதிமுக நிர்வாகிகள் தேர்தல் நடந்து வருகிறது. கடந்த வாரம் மாவட்டச் செயலாளர்கள் தேர்தல் நடந்தது. இதில் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் நேற்று வெளியானது. இதில் யாரும் எதிர்பாராத வகையில் சேலம் புறநகர் மாவட்டச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியின் நண்பர் இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளார். 

எடப்பாடி பழனி சாமி, கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் புறநகர் மாவட்டச் செயலாளராக இருந்து வருகிறார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு கட்சி இரண்டாக உடைந்தது. இதில் ஆட்சிக்கு முதல்வராக எடப்பாடி பழனிசாமி, கட்சிக்கு பன்னீர்செல்வம் என முடிவு செய்யப்பட்டது. ஆனால் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. ஆனால், தற்போது கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் போன்ற பதவிகளை வைத்திருந்தாலும் சேலம் புறநகர் மாவட்டச் செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி யாருக்கும் விட்டுக்கொடுக்கவில்லை.

இந்நிலையில், கடந்த வாரம் மாவட்ட செயலாளர் பதவிக்கான தேர்தல் நடந்தது. சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு கூட செல்லாமல் சேலத்தில் முகாமிட்டிருந்த எடப்பாடி பழனிசாமி மாவட்ட செயலாளர் பதவிக்கு வேட்பும னுவை தாக்கல் செய்தார். இதையடுத்து கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். அனைவரின் வாழ்த்தையும் பெற்றுக்கொண்டார். அப்போது எடப்பாடி பழனிசாமியை வாழ்த்தி தொண்டர்கள் உற்சாக கோஷம் எழுப்பினர். மாவட்டச் செயலாளர் பதவிக்கு அவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யப்படவில்லை. 

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியின் நண்பரும், சேலம் புறநகர் மாவட்ட ஜெ.பேரவை செயலாளரும், கூட்டுறவு வங்கி மாநில தலைவருமான இளங்கோவனை வேட்பு மனு தாக்கல் செய்யுமாறு ரகசியமாக கூறியதாக தெரிகிறது. அதன்படி, மூத்த நிர்வாகிகளுக்கு தெரியாமல் இளங்கோவன் மாவட்டச் செயலாளர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்

எடப்பாடி பழனிசாமி தான் மாவட்டச் செயலாளர் என தொண்டர்கள் நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில் திடீரென இளங்கோவன் புறநகர் மாவட்ட செயலாளராக தேர்வானதாக அறிவிக்கப்பட்டது.

அதே நேரத்தில் கட்சியின் சார்பில் முதலில் வெளியிடப்பட்ட நிர்வாகிகள் பட்டியலில் சேலம் மாவட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இரவு சேலம் மாநகர் மாவட்டம் மற்றும் புறநகர் மாவட்ட நிர்வாகிகள் பட்டியல் வெளியானது. இந்த அறிவிப்ப அதிமுக நிர்வாகிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இதுகுறித்த அதிமுகவினர் கூறுகையில், எடப்பாடி பழனிசாமி மாவட்டச் செயலாளர் பதவியை யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டார். எனவேதான் பேரவைக்கூட செல்லாமல் வேட்புமனுவை தாக்கல் செய்தார். தற்போது கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தீவிரமடைந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை வளையத்திற்குள் இளங்கோவன் வருவதாக தொடர்ந்து தகவல்கள் வந்தவண்ணம் இருக்கிறது. மிரட்டல் காரணமாக இளங்கோவன் புறநகர் மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட்டிருகலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

யார் வேண்டுமானாலும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றிருந்தால் 5 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருப்பார்கள். இந்த நியமனம் உண்மையாக கட்சிக்காக உழைத்த நிர்வாகிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அதிமுகவினர் குமுறிக் கொண்டிருக்கின்றனர் .

இருந்தாலும் நண்பன் என்ற முறையில் இந்த பதவியை அவருக்கு விட்டுக் கொடுத்திருக்கலாம் என்றும் இதுநாள் வரை தன்னுடன் துணையாக இருந்தவரை தொடர்ந்து தன் அருகில் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் எடப்பாடி இந்த முடிவு எடுத்திருக்கலாம் என்றும் பரவலான கருத்து நிலவுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com