பண மோசடி வழக்கு: சஞ்சய் ரெளத்துக்கு ஆக. 4 வரை அமலாக்கத் துறை காவல்

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ரௌத்தை ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 
பண மோசடி வழக்கு: சஞ்சய் ரெளத்துக்கு ஆக. 4 வரை அமலாக்கத் துறை காவல்

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசேனை மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் ரௌத்தை ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

அமலாக்கத் துறையினர் 8 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரிய நிலையில், 4  நாள்களுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அமலாக்கத் துறையால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்ட சஞ்சய் ரெளத் இன்று பிற்பகல் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.   நீதிபதி எம்.ஜி. தேஷ்பாண்டே இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டார்.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை சஞ்சய் ரெளத் வீட்டில் 9 மணி நேர சோதனை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து அமலாக்கத் துறையினர் சஞ்சய்  ரெளத்தை தங்களது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அங்கு 6 மணி நேரம் தொடர்ந்து விசாரணை நடைபெற்ற நிலையில், சஞ்சய் ரெளத் அதிகாலை 12.45 மணிக்கு கைது செய்யப்பட்டார்.

மும்பையில் குடிசைப் பகுதி மறுசீரமைப்புத் திட்டத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகாரில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் குறித்து அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில், சஞ்சய் ரௌத், அவரது மனைவி, உதவியாளர்கள் தொடர்பான பணப் பரிவர்த்தனைகள் விசாரிக்கப்படுகின்றன. 

இவ்வழக்கில் கடந்த ஜூலை 1-ஆம் தேதி சஞ்சய் ரௌத்திடம் அமலாக்கத் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதன் பிறகு, இரு முறை அவருக்கு அழைப்பாணைகள் அனுப்பப்பட்டன. ஆனால், நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பங்கேற்க வேண்டியுள்ளதாக கூறி, இருமுறையும் அவர் ஆஜராகவில்லை.

இந்நிலையில், மும்பையில் உள்ள அவரது வீட்டுக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையுடன் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

இன்று பிற்பகல் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ஜி. தேஷ்பாண்டே முன்னிலையில் சஞ்சய் ரெளத் ஆஜர்படுத்தப்பட்டார். பணமோசடி தொடர்பாக இரு தரப்பிலும் விசாரணை நடைபெற்றது.

சஞ்சய் ரெளத்தை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறை சார்பில் 8 நாள்கள் அவகாசம் கோரப்பட்டது. சஞ்சய் ரெளத் சார்பில் வழக்குரைஞர் அசோக் முண்டார்கி ஆஜராகினார். யூகத்தின் அடிப்படையில் அமலாக்கத் துறை ரெளத்தை கைது செய்துள்ளதாக வாதாடினார். 

இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, சஞ்சய் ரெளத்தை ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com