பனாஜி: ஹரியாணா பாஜக மூத்த தலைவரும் நடிகையுமான சோனாலி போகாட் (42) விடுமுறையை கழிக்க தனது கூட்டாளிகளுடன் கோவா சென்றவர் அங்கு செவ்வாய்க்கிழமை மாரடைப்பால் உயிரிழந்தாா். அவரது மரணம் இயற்கைக்கு மாறானது என கோவா போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். ஆனால், சோனாலி போகாட் தனது கூட்டாளிகளால் கொலை செய்யப்பட்டிருப்பதாக அவரது சகோதரர் ரிங்கு டாகா பரபரப்பு புகார் கூறியுள்ளார்.
பொழுதுபோக்கு தொலைக்காட்சித் தொடரான ‘பிக் பாஸ்‘ நிகழ்ச்சியில் பங்கேற்றவா் சோனாலி போகாட். தனது அலுவலக ஊழியா்களுடன் இவா் கோவாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தாா். வடக்கு கோவா மாவட்டத்தின் அஞ்ஜுனாவில் உள்ள தனியாா் விடுதியில் தங்கியிருந்த சோனாலிக்கு, திங்கள்கிழமை இரவு திடீா் உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடா்ந்து, அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.
எனினும் அவா் கோவா அஞ்சுனா பகுதியில் உள்ள செயின்ட் அந்தோணி மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்ததாக காவல் துறையினா் தெரிவித்தனா். முதல்கட்ட விசாரணையில் அவா் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்ததாகவும், தொடா்ந்து விசாரணை நடைபெறுவதாகவும் தெரிவித்தனா்.
இதுகுறித்து சோனாலியின் சகோதரி ரூபேஷ் கூறுகையில், சோனாலி இறப்பதற்கு முதல் நாள் மாலை வாட்ஸ் ஆப்பில் தாயிடம் போகாட் பேசினாள், உணவு உண்ட பிறகு உடல் ஏதோ ஒருவித அசௌகரியத்தை உணர்வதாக அவர் தெரிவித்திருந்தார்.
சோனாலியின் மூத்த சகோதரர் ராமன், தனது சகோதரி நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்ததாகவும், மாரடைப்பு வந்திருக்க வாய்ப்பில்லை என்றும் கூறினார்.
முறையான விசாரணையை நாங்கள் கோருகிறோம். அவள் மாரடைப்பால் இறந்ததை எங்கள் குடும்பம் ஏற்கத் தயாராக இல்லை. அவளுக்கு மருத்துவ ரீதியாக எந்த பிரச்னையும் இல்லை என்று ராமன் கூறினார்.
இதையும் படிக்க | விண்ணப்பதாரா் ஒருமுறை பதிவு நடைமுறை: யுபிஎஸ்சி அறிமுகம்
மேலும், சோனாலி உயிரிழப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் சில படங்கள் மற்றும் விடியோக்களை பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில், சோனாலியின் மரணத்தில் எங்களுக்கு சந்தேகம் இருப்பதாகவும், தொடர்ந்து காவல்துறை முறையாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் சோனாலி போகட் இறந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவரது உடலை உடல் கூறாய்வு அல்லது தடயவியல் பரிசோதனை செய்வதற்கு ஒப்புக்கொண்ட அவரது குடும்பத்தினர், அதனை விடியோவாக பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து கோவா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதன்கிழமை உடல் கூறாய்வு செய்ய திட்டமிடப்பட்டது.
ஆனால், சோனாலி போகட்டின் சகோதரர் ரிங்கு டாகா புதன்கிழமை சோனாலி போகட் தனது கூட்டாளிகள் இரண்டு பேரால் கொலை செய்யப்பட்டதாக கோவா காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இரண்டு பேர் மீதும் கோவா காவல்துறை வழக்குப் பதிவு செய்த பின்னரே உடல் கூறாய்வு செய்ய குடும்பத்தினர் அனுமதிப்பார்கள் என்று தெரிவித்தார்.
மேலும், சோனாலி போகட் இறப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு, தனது தாய், சகோதரி மற்றும் மைத்துனரிடம் பேசினாள். அப்போது அவள் குழப்பமடைந்திருந்தாள், தனது இரண்டு கூட்டாளிகளுக்கு எதிராக புகார் செய்துள்ளதாகவும் அவர்களால் அவள் கொலை செய்யப்பட்டிருக்கிறாள் என்று குற்றம் சாட்டினார்.
மேலும், அவளது மரணத்தைத் தொடர்ந்து ஹரியாணாவில் உள்ள அவரது பண்ணை வீட்டில் இருந்த சிசிடிவி கேமராக்கள், மடிக்கணினி மற்றும் பிற முக்கிய பொருள்கள் காணாமல் போய்விட்டதாகவும் அவர் கூறினார்.
இதையும் படிக்க | கர்நாடகத்தில் கோர விபத்து: தொழிலாளர்கள் 9 பேர் பலி; 11 பேர் காயம்
ரின்கு டாக்கா புகார் மீது இதுவரை வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.
இந்நிலையில், சோனாலி போகட் மரணம் குறித்து கோவா மாநில காவல்துறை விரிவான விசாரணை நடத்தி வருவதாக கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் புதன்கிழமை தெரிவித்தார்.
மருத்துவர்கள் மற்றும் கோவா காவல்துறை இயக்குநர் (டிஜிபி) ஜஸ்பால் சிங் ஆகியோரிடம் கருத்தை கேட்டறிந்ததின் படி, அவர் மாரடைப்பால் இறந்தது போல்தான் தெரிகிறது என்று பிரமோத் சாவந்த்கூறினார்.
இந்நிலையில், வியாழக்கிழமை காலை, சோனாலி போகட்டின் மருமகன் மொஹிந்தர் போகட் செய்தியாளர்களிடம் கூறுகையில், சோனாலி போகட்டின் உடல் கூறாய்வை முழுமையாக விடியோ பதிவு செய்யப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் குடும்பத்தினர் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறினார்.
உடல் கூறாய்வுக்குப் பிறகு புகார் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்படும் என்று போலீசார் கூறியுள்ளனர்.
உடலை உடல் கூறாய்வு செய்வதற்காக ஏற்கனவே இரண்டு மருத்துவர்கள் கொண்ட குழு, தடயவியல் பரிசோதனை செய்வதற்காக இரண்டு தடயவியல் நிபுணர்கள் கொண்ட குழுவினரை கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஏற்கனவே அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.