ராகுல் காந்தி தலைமையிலான பாரதத்தை இணைப்போம் ஒற்றுமை நடைப்பயணத்தில் கலந்து கொண்டதால் ஆசிரியர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் மத்தியப் பிரதேசத்தின் பர்வானி மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.
ராஜேஷ் கன்னோஜ் என்பவர் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்து வந்துள்ளார். இந்தப் பள்ளி மத்தியப் பிரதேச அரசின் பழங்குடியினர் நலத்துறைக்கு கீழ் செயல்பட்டு வருகிறது. தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பணிபுரியும் ராஜேஷ் கடந்த நவம்பர் 25 ஆம் தேதி பள்ளி ஆசிரியர் பணியிலிருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் அவரது பணியிடை நீக்கம் செய்யப்பட்ட உத்தரவு சமூக வலைத்தளங்களில் வைரலானதால் இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பள்ளி விதிமுறைகளை மீறி அரசியல் சம்பந்தப்பட்ட பேரணியில் கலந்து கொண்டதால் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஆசிரியர் ராஜேஷ் முக்கியப் பணி இருப்பதாக விடுப்புக் கேட்டுவிட்டு பேரணியில் கலந்து கொண்டுள்ளார். அதன்பின்னர் அந்தப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளதாகவும் தெரிகிறது. அதன்பின்னர் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: என்னுள் ஒரு பகுதி இந்தியா: சுந்தர் பிச்சை நெகிழ்ச்சி
கடந்த நவம்பர் 24 ஆம் தேதி பாரதத்தை இணைப்போம் ஒற்றுமை நடைப்பயணத்தில் ராஜேஷ் கன்னோஜ் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.