ம்காராஷ்டிர மாநிலம் மும்பையில் அதிகரித்துவரும் கரோனா தொற்று காரணமாக பொதுமுடக்கம் விதிக்கப்படுவது குறித்து மாநகர மேயர் கிஷோரி பெட்னேகர் விளக்கமளித்துள்ளார்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதன்காரணமாக் இரவுநேரப் பொதுமுடக்கம், பொதுஇடங்களில் மக்கள் கூட கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கரோனா தொற்று பரவலானது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மும்பையில் ஒருநாள் கரோனா தொற்று 8 ஆயிரத்தைக் கடந்து பதிவாகி வருகிறது. இதன்காரணமாக பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக மும்பை மாநகர மேயர் கிஷோரி பெட்னேகர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தற்போது பொதுமுடக்கம் விதிக்கப்படுவதை யாரும் விரும்பவில்லை. கரோனா பாதிப்பிலிருந்து ஒவ்வொருவரும் இப்போதுதான் மீண்டு வருகின்றனர். மீண்டும் பொதுமுடக்கத்தை அறிவித்தால் பலரும் மோசமான பாதிப்பிற்குள்ளாவர்.
இதையும் படிக்க | கரோனா அதிகரிப்பு: எய்ம்ஸ் மருத்துவர்களின் குளிர்கால விடுமுறை ரத்து
அதேசமயம் தினசரி கரோனா பாதிப்பு 20 ஆயிரத்தைக் கடந்தால் மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி பொதுமுடக்கம் விதிக்கப்படுவது குறித்து முடிவெடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
மும்பையில் இதுவரை 40 பேர் ஒமைக்ரான் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை 8 லட்சத்து 7 ஆயிரத்து 602 பேர் கரோனா தொற்று பாதிப்பிற்குள்ளாகியுள்ள நிலையில் 16379 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.