சீனாவுடனான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வந்தாலும் எல்லைகளில் பதற்றம் தொடர்ந்து நீடித்து வருவதாக ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டின் மேற்கு பிராந்தியங்களில் பயங்கரவாதிகளின் நடமாட்டமும் எல்லைகள் வழியாக ஊடுருவல் முயற்சியும் கடந்த காலங்களில் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த நரவணே பேசியது:
கடந்த ஜனவரியை ஒப்பிடும்போது வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் சாதகமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளன. வடக்கு எல்லைகளில் உயர்நிலை தாக்குதலுக்கு தயார் நிலையில் இருந்தாலும், சீனா ராணுவத்துடனான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளின் மூலமாக பல்வேறு ஆக்கிரமிப்பு பகுதிகளிலிருந்து விலகியுள்ளனர். கடந்த ஓராண்டாக சாதகமான போக்கு நிலவி வருகின்றது. தற்போது உயர்மட்ட அதிகாரிகள் மத்தியில் 14வது கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஒருபுறம் விலகல் இருந்தபோதிலும், மறுபுறம் அச்சுறுத்தல்கள் எந்த வகையிலும் குறையவில்லை. வரும் நாள்களில் சாதகமான முடிவெடுகள் எட்டப்படும் என எதிர்பார்க்கின்றோம்.
நாகாலாந்தில் கடந்த டிசம்பர் 4-ம் தேதி நடந்த வருந்தத்தக்க சம்பவம் குறித்து முழுமையாக விசாரிக்கப்பட்டு வருகிறது. ராணுவ நடவடிக்கைகளின்போது கூட, நம் நாட்டு மக்களின் பாதுகாப்பில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
மேற்குப் பகுதியிலிருந்து பல்வேறு ஏவுதளங்களில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி அதிகரித்து வருகிறது.
போர் அல்லது சண்டை கடைசி ஆயுதமே. ஆனால், அதை மேற்கொண்டால் வெற்றி பெறுவது உறுதி எனத் தெரிவித்தார்.