
ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தில் ஏரி ஒன்றின் அருகே மீட்கப்பட்ட அழுகிய நிலையிலிருந்த பெண்ணின் கையில் எழுதப்பட்டிருந்த எண்ணை வைத்து வழக்கு விசாரணையில், காவலர்கள் துப்புதுலக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஷமீர்பெட் அருகே ஜனவரி 9ஆம் தேதி ஏரி அருகே அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இதையும் படிக்க.. உத்தரகண்ட் தொப்பி, மணிப்பூர் துண்டு அணிந்து வந்த பிரதமர் மோடி
இந்த வழக்கில் பெரிதாக எந்த துப்பும் கிடைக்காத நிலையில், அழுகிய நிலையிலிருந்த பெண்ணின் கையில் எழுதப்பட்டிருந்த மங்கலான எண்களை காவலர்கள் கண்டுபிடித்தனர்.
அந்த எண்களும் தெளிவில்லாமல், வெறும் ஏழு எண்கள் மட்டுமே இருந்த நிலையில், மிச்சம் மூன்று எண்களைக் கண்டுபிடித்து, அந்த எண்களில் எந்த எண் சம்பவம் நடந்தபோது, அந்த ஏரிக்கு அருகே பதிவாகியிருந்தது என்பதைக் கண்டறிந்தனர்.
இதைக் கொண்டு, கொல்லப்பட்ட பெண்ணின் அடையாளம் கண்டறியப்பட்டு, அவர்களது குடும்பத்தாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதோடு, பெண்ணின் ஆண் நண்பரும் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து காவலர்கள் கூறுகையில், வெறும் ஏழு எண்களைக் கொண்டு செல்லிடப்பேசி எண்ணைக் கண்டறிய சுமார் 2 ஆயிரம் எண்களை காவலர்கள் பரிசோதித்தனர். அதில் கிட்டத்தட்ட 90 செல்லிடப்பேசிகள், உடல் கிடைத்த ஏரிக்கு அருகே நடமாட்டத்தில் இருந்துள்ளது விசாரணையை மேலும் சிக்கலாக்கியது.
தொடர்ந்து நடந்த விசாரணையில், பலியான பெண்ணின் மத்தியப் பிரதேசத்தில் வசிக்கும் சகோதரரின் எண் கிடைத்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், பலியான பெண்ணுடன் யோகேஷ் என்பவர் நெருங்கிப் பழகி வந்தது தெரிய வந்தது. விசாரணை நடத்தியதில், பெண்ணுக்கு வேறொருவருடன் பழக்கம் ஏற்பட்டதால் சந்தேகப்பட்டு யோகேஷ், தனது நண்பருடன் சேர்ந்து கொலை செய்தது தெரிய வந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.