மருமகளை களமிறக்கிய பாஜக; பின்வாங்கிய காங்கிரஸ் தலைவர்

கோவா முன்னாள் முதல்வரான பிரதாப்சிங் ரானேவை பொரியம் தொகுதி வேட்பாளராக காங்கிரஸ் களமிறக்கிய நிலையில், அவரின் மருமகளான தேவியா விஸ்வஜீத் ரானேவை அந்த தொகுதியின் வேட்பாளராக பாஜக அறிவித்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கோவா சட்டப்பேரவை தேர்தலில் நட்சத்திர வேட்பாளராக இருப்பவர் அம்மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பிரதாப்சிங் ரானே. பொரியம் தொகுதி எம்எல்ஏவாக 11 முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரானேவை எதிர்த்து, அவரின் மருமகளை வேட்பாளராக களமிறக்கியுள்ளது பாஜக.

இந்த நிலையில், போட்டியிலிருந்து விலகுவதாக ரானே அறிவித்துள்ளார். இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. குடும்பத்தின் அழுத்தம் காரணமாக விலகவில்லை என்றும் வயது மூப்பின் காரணமாக விலகுகிறேன் என்றும் ரானே விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதமே, பொரியம் தொகுதியில் ரானே போட்டியிடுவார் என காங்கிரஸ் அறிவித்துவிட்டது. இதற்கு மத்தியில், கடந்த வாரம்தான், ரானேவின் மருமகளான தேவியா விஸ்வஜீத் ரானேவை வேட்பாளராக பாஜக அறிவித்தது. இந்த தொகுதியில் ரானே தோல்வி அடைந்ததே இல்லை.

கோவா முதல்வராக நீண்ட காலம் பொறுப்பு வகித்தவர் ரானேதான். அவரின் மகன் விஸ்வஜீத் ரானே பாஜக அமைச்சராக பொறுப்பு விகித்துவருகிறார். கடந்த 2017 ஆண்டு தேர்தலுக்கு பிறகு, காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய விஸ்வஜீத் ரானே பாஜகவில் இணைந்தார்.

முன்னதாக, ரானே போட்டியிடவில்லை என வெளியான தகவலுக்கு அவரே மறுப்பு தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், "கட்சி எனது பெயரை வேட்பாளராக அறிவித்திருந்தால் நான் போட்டியிடுவேனா இல்லையா என்ற கேள்வியே எழுந்திருக்காது" என்றார்.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் வேட்பாளர்கள் கூட்டத்தில் கூட ரானே கலந்து கொண்டார். கடந்த 45 ஆண்டுகளாக, பொரியம் தொகுதி காங்கிரஸ் வசம் இருந்துவருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com