நீட் தேர்வை ஒத்திவைக்கக்கோரிய மனுக்களை தில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மகாராஷ்டிரம், குஜராத் ஆகிய மாநிலங்களில் தற்போது கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த சூழ்நிலையில் நீட் தேர்வை எழுத முடியாது என்பதால் அதனை ஒத்திவைக்க வேண்டும் என்று மாணவர்கள் 15 பேர் தனித்தனியே தில்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கினை இன்று விசாரித்த நீதிபதிகள், அடிப்படை முகாந்திரம் என்று எதுவும் இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
முன்னதாக நீதிபதிகள், 'சில மாணவர்களால் நீட் தேர்வுக்கு செல்ல முடியவில்லை என்பதனால் நாடு முழுவதும் நடக்கவுள்ள தேர்வினை ஒத்திவைக்க முடியாது. இனி இவ்வாறான வழக்குகள் தொடரப்பட்டால் அபராதம் விதிக்கக்கூட தயங்கமாட்டோம்' என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரிய மனுக்கள் உச்சநீதிமன்றத்திலும் விசாரணையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.