குவகாத்தி: மிசோரம் மாநிலத்தின் ஒரே ஒரு பாஜக எம்எல்ஏவான புத்த தன் சக்மா உள்ளிட்ட 12 பேருக்கு ஊழல் வழக்கில், ஓராண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து உள்ளூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சிறப்பு நீதிமன்ற நீதிபதி (ஊழல் ஒழிப்பு சட்டம்) வான்லலேன்மாவியா பிறப்பித்த உத்தரவில், குற்றவாளிகள் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அனைத்துக் குற்றவாளிகளும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஓராண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
ஆளுநரிடம் உரிய அனுமதி பெறாமலேயே, ஊதியத்தொகையில் முன்கூட்டியே பணத்தை எடுத்து, தங்களுக்கு இருந்த அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியக் குற்றச்சாட்டில் சக்மா தன்னாட்சி மாவட்ட கவுன்சில் மூத்த செயல் உறுப்பினர் உள்பட 13 பேரும் குற்றவாளிகள் என்று ஜூலை 22ஆம் தேதி நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
இந்த நிலையில், பாஜக எம்எல்ஏ சக்மா, இந்த தீர்ப்பை எதிர்த்து குவகாத்தி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாகத் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, அவர்கள் மேல்முறையீடு செய்ய வசதியாக 90 நாள்கள் இடைக்கால பிணை அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.
வழக்குக் குறித்து சக்மா கூறுகையில், சக்மா தன்னாட்சி மாவட்ட கவுன்சில் உறுப்பினராக பணியாற்றியபோது, மாத ஊதியம் சரியான நேரத்தில் வழங்கப்படாததால், பல்வேறு நிதிச் சிக்கல்களை சந்தித்ததாகவும், அதனால், ஊதியத்தில் முன்கூட்டிய ஒரு தொகையை பெற்றதாகவும் கூறியிருக்கிறார்.
நாங்கள் எல்லாவற்றையும் சட்டப்பூர்வமாகவே செய்தோம். கடன் குறித்து எங்கள் கவனத்துக்கு வந்த போது உடனடியாக நாங்கள் பெற்றத் தொகையை திரும்ப செலுத்திவிட்டோம். தற்போது எங்களுக்கு இரண்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நாங்கள் பணத்தை செலுத்திய பிறகும் எங்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நாங்கள் பொதுமக்கள் பணத்தை தவறாகப் பயன்படுத்தவில்லை. எனவே நாங்கள் நிச்சயம் இந்த வழக்கில் வெற்றி பெறுவோம் என்று கூறியுள்ளார்.