நாடாளுமன்றத்தில் பாஜக, காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவை இன்று காலை கூடியவுடன், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு குறித்து காங்கிரஸ் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் செளத்ரி கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.
இதற்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் எழுந்து நின்று அமளியில் ஈடுபட்டதை தொடர்ந்து, பாஜக அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்களும் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மக்களவை பகல் 12 வரை ஒத்திவைக்கப்படுவதாக ஓம் பிர்லா அறிவித்தார்.
அதேபோல், மாநிலங்களவையிலும் ஆளுங்கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சியினர் மாறிமாறி முழக்கம் எழுப்பியதால் பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஆகஸ்ட் 12 வரை நடைபெறவுள்ளது.