குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு குறித்துப் பேசியதற்கு அவரிடம் மன்னிப்பு கேட்கத் தயார் என காங்கிரஸ் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி கூறியுள்ளார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு குறித்து காங்கிரஸ் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்காக சௌத்ரியும் காங்கிரஸ் கட்சியும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி பாஜக எம்.பி.க்கள் இன்று நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, 'குடியரசுத் தலைவரை அவமதிக்க வேண்டும் என்று நான் நினைத்துக்கூட பார்க்க முடியாது. அது தவறுதலாக நடந்துவிட்டது. குடியரசுத் தலைவர் இதுகுறித்து வருத்தப்பட்டால் நான் தனியாக அவரை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்பேன். அவர்கள் விரும்பினால் என்னை தூக்கிலிடலாம். தண்டனையை ஏற்றுக்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். ஆனால், இந்த விவகாரத்தில் சோனியா காந்தியை ஏன் இழுக்க வேண்டும்?' என்று பேசியுள்ளார்.
முன்னதாக அவர், 'நான் வாய் தவறி பேசியதால், மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கேள்விக்கே இடமில்லை. தவறுதலாக கூறிவிட்டேன். பாஜகவினர் தேவையற்ற சர்ச்சையை கிளப்பி வருகின்றனர்' என்று கூறியிருந்தார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்பட அக்கட்சியினர், இந்த விவகாரத்தில் சௌத்ரி ஏற்கெனவே மன்னிப்பு கேட்டுவிட்டதாகக் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | 'ஆதிர் ரஞ்சன் சௌத்ரி மன்னிப்பு கேட்டுவிட்டார்' - சோனியா காந்தி