ஆமதாபாத்: பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்தின் காந்திநகரில் வசிக்கும் தனது தாயின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.
பிரதமர் மோடி இன்று காலை குஜராத்தில் தனது இல்லத்துக்குச் சென்று தாயின் கால்களுக்கு பாதபூஜை செய்து, இனிப்புகளை ஊட்டி ஆசி பெற்றார்.
இதற்கிடையே, தனது 100வது பிறந்தநாளைக் கொண்டாடும் தாய் பற்றியும், அவருடனான தனது குழந்தைப்பருவ அனுபவங்கள் குறித்தும் உணர்ச்சிபூர்வ பதிவை வெளியிட்டுள்ளார் மோடி.
மோடி கூறியிருப்பதாவது, "என் தாயின் வாழ்க்கையின் மூலம், இந்திய அன்னையர்களின் தவம், தியாகம் மற்றும் பங்களிப்பை நான் காண்கிறேன். என் தாயைப் பார்க்கும்போது, அவரைப் போன்ற கோடிக்கணக்கான பெண்களையும் பார்க்கும் போதெல்லாம், இந்தியப் பெண்களால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை என்று நான் கருதுகிறேன்."
"இன்று எனது தாய் ஹீராபென் மோடி தனது 100வது வயதுக்குள் அடியெடுத்து வைக்கிறார் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்." என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனது தாய்க்கு, எனது பாட்டியின் முகம் கூட நினைவில் இல்லை. அவர் தனது தாயின் அருகாமையைக் கூட அனுபவித்ததில்லை. என் தாய், குழந்தைப் பருவத்திலேயே அவரது தாயை இழந்துவிட்டார், அதனால் தனது குழந்தைப் பருவம் முழுக்க தாயின் அரவணைப்பில்லாமலேயே வளர்ந்தவர் என்றும் மோடி தெரிவித்துள்ளார்.