ரஷிய அதிபர் விளாமிதீர் புதினுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக 50 நிமிடங்கள் கலந்துரையாடியதாக அரசுத் தரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைன் மீது ரஷியப் படைகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பல்வேறு நாடுகள் ரஷியாவிற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், இந்தியா தொடர்ந்து நடுநிலை வகித்து வருகின்றது.
உக்ரைன் மற்றும் ரஷிய அதிபருடன் இந்திய பிரதமர் மோடி ஏற்கனவே கடந்த வாரம் போர் சூழல் குறித்து கலந்துரையாடினார்.
இந்நிலையில், இன்று பகலில் மீண்டும் உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கியை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட மோடி 35 நிமிடங்கள் பேசினார்.
இதனைத் தொடர்ந்து, ரஷிய அதிபர் புதினை தொடர்பு கொண்ட பிரதமர் மோடி அவரும் 50 நிமிடங்கள் வரை கலந்துரையாடியதாக அரசுத் தரப்பு தகவல் வெளியாகியுள்ளன.
இதையும் படிக்க | உக்ரைன் அதிபருடன் மோடி பேச்சு: 35 நிமிட உரையாடலில் பேசியது என்ன?
மேலும், இந்த பேச்சின்போது, வடகிழக்கு முக்கிய நகரான சுமியில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ரஷியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என மோடி கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கோரிக்கையை ஏற்ற புதின், சுமியில் சிக்கியுள்ள இந்தியர்களை பாதுகாப்பாக விரைவில் மீட்க அனைத்து விதமான ஒத்துழைப்பும் அளிக்கப்படும் என உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.