புதுதில்லி: இந்தியா உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருத்துவ மையமாக திகழ்ந்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கடந்த 9 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், குஜராத்தின் ஜாம்நகரில், பாரம்பரிய மருந்துகளுக்கான உலக சுகாதார அமைப்பின் சர்வதேச மையத்தை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
ஆயுஷ் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் ஜாம்நகரில் அமைக்கப்பட உள்ள இந்த மையத்திற்காக, மத்திய அரசு உலக சுகாதார அமைப்புடன் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொள்ளும். இந்த மையம் பாரம்பரிய மருத்துவத்திற்காக, அதன் தலைமையிடத்திற்கு வெளியே அமைக்கப்படும் முதலாவது மற்றும் சர்வதேச மையமாக திகழும்.
இந்த மையம் அமைக்கப்படுவதன் மூலம் ஆயுஷ் மருத்துவமுறைகளை உலகம் முழுவதும் பரவச் செய்ய முடியும். அத்துடன் பாரம்பரிய மருத்துவம் தொடர்பான சர்வதேச சுகாதார விவகாரங்களில் இந்தியா தலைமை வகிக்கவும் வகை செய்யும். தரமான, பாதுகாப்பான, நோய்களை குணப்படுத்தக் கூடிய அதிக திறன் கொண்ட மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்வதுடன் பாரம்பரிய மருந்துகளை முறையாக பயன்படுத்தவும் இந்த மையம் உதவிகரமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், குஜராத்தில் உள்ள ஜாம்நகரில் உள்ள பாரம்பரிய மருத்துவத்திற்கான உலக சுகாதார அமைப்பின் சர்வதேச மையத்தை, குஜராத்தில் உள்ள ஆயுர்வேத பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், அதன் இடைக்கால அலுவலகத்துடன் நிறுவுவதற்கான உலக சுகாதார நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் இன்று ஆயுஷ் அமைச்சகம் கையெழுத்திட்டது.
இந்நிலையில், இந்தியா உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருத்துவ மையமாக திகழ்ந்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்க பதிவில், அதிநவீன வசதிகளைக் கொண்ட நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. பாரம்பரிய மருத்துவத்திற்கான சர்வதேச மையம், உலக நன்மைக்காக ஒரு ஆரோக்கியமான நல்வாழ்வு நடைமுறைகளை உருவாக்குவதற்கும், நமது பாரம்பரிய நடைமுறைகளை மேம்படுத்துவதற்கும் பங்களிக்கும் என்று மோடி கூறியுள்ளார்.
உலகில் 170 நாடுகளில் பாரம்பரிய மருத்துவ சிகிச்சை நடைமுறையில் உள்ளதாகவும், 80 சதவிகித மக்கள் பாரம்பரிய மருந்துகளையே பயன்படுத்தி வருவதாகவும் உலக சுகார அமைப்பு தெரிவித்துள்ளது.