ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டதில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு அம்மாநில முதல்வர் நிவாரணம் அறிவித்தார்.
இன்று காலை 6.44 மணியளவில் பயணிகள் ரயிலுக்காக நடைமேடையில் காத்திருந்தபோது விபத்து நிகழ்ந்ததாகக் கிழக்கு கடற்கரை ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
டோங்கோபோசியில் இருந்து சத்ரபூருக்குச் செல்லும் வெற்று சரக்கு ரயிலின் ஓட்டுநர், திடீரென பிரேக் அடித்ததால், ரயிலிலிருந்து 8 பெட்டிகள் தடம் புரண்டு, பிளிட்பாரமில் இருந்த பயணிகள் மீது விழுந்ததாக ஊழியர்கள் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் இரண்டு பெண்கள் உள்பட மூவர் உயிரிழந்தனர். 7 பேர் காயமடைந்தனர். சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இறந்தவர்களின் உறவினர்களுக்கு ரூ.5 லட்சமும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், சிறு காயம் அடைந்தவர்களுக்கு ரூ.25,000ம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
முதல்வர் நவீன் பட்நாயக் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததோடு, இறந்தவர்களின் உறவினர்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணமும், காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சையும் அறிவித்தார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் ரமில்லா மல்லி சம்பவ இடத்திற்குச் சென்று நிலைமையை ஆய்வு செய்யுமாறு முதல்வர் கேட்டுக் கொண்டார்.
இந்த விபத்து காரணமாக இரு வழித்தடங்களும் தடைப்பட்டதால், ஹவுரா-சென்னை வழித்தடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. மேலும் 12 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.