2023 டிசம்பருக்குள் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் 5ஜி சேவை கிடைக்கும் என ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
தில்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்ற 6-ஆவது இந்திய கைப்பேசி மாநாட்டில், அதிவேக அலைக்கற்றைத் திறன் கொண்ட ஐந்தாம் தலைமுறை என்கிற 5ஜி சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடக்கிவைத்தார்.
இவ்விழாவில் கலந்துகொண்ட ஜியோ நிறுவனத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், '2023 டிசம்பருக்குள் ஒவ்வொரு இந்தியரும் 5ஜி சேவையைப் பெறுவார்கள் என ஜியோ உறுதியளிக்கிறது. வருகிற தீபாவளி நாளுக்குள் நாட்டின் குறிப்பிட்ட நகரங்களில் முழுமையான 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும்.
தொடக்கத்தில் தில்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய நான்கு மெட்ரோ நகரங்களில் ஜியோ 5ஜி சேவையை அறிமுகப்படுத்தவுள்ளது. படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு 2023 டிசம்பருக்குள் நாடு முழுவதும் முழுமையான 5ஜி சேவை பயன்பாட்டில் இருக்கும்.
இந்தியாவில் 5ஜி நெட்வொர்க்கை உருவாக்க ஜியோ மொத்தம் ரூ.2 லட்சம் கோடி முதலீடு செய்துள்ளது.
ஜியோ 5ஜி சேவை, உயர்ந்த தரம் மற்றும் மலிவு விலையில் ஒவ்வொருவரையும் இணைக்கும். மேலும் மிகப்பெரிய மற்றும் மேம்பட்ட சேவையாக இருக்கும். சீனா, அமெரிக்காவைவிட இந்தியாவை தரவு சார்ந்த பொருளாதார நாடாக மாற்ற நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்' என்று பேசினார்.
இதையும் படிக்க | 5ஜி சேவையை தொடக்கிவைத்தார் பிரதமர் மோடி!