குஜராத் மாநிலத்தில் பழங்குடியின காங்கிரஸ் எம்எல்ஏ மர்மநபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் வன்ஸ்டா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆனந்த்படேல். இவர் பழங்குடியின சமூகத்தின் தலைவராகவும் உள்ளார். நேற்றிரவு கூட்டம் ஒன்றில் பங்கேற்பதற்காக நவ்சாரி மாவட்டம் ஹர்ஜம் என்ற பகுதிக்கு தனது காரில் சென்றார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் காரை வழிமறித்து அவர் மீது தாக்குதல் நடத்தியது.
அத்துடன் காரின் கண்ணாடியையும் அடித்து நொறுக்கியது. இந்த சம்பவத்தில் ஆனந்த்படேல் லேசான காயமடைந்தார். இந்த நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆனந்த்படேல் தாக்கப்பட்டதை அறிந்த அவரது ஆதரவாளர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கடைகள் அடித்து நொறுக்கப்பட்டு பல கட்டடங்களுக்கு தீ வைக்கப்பட்டன.
ஜுலா பஞ்சாயத்து பாஜக தலைவர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தன்னை தாக்கியதாக எம்.எல்.ஏ. ஆனந்த்படேல் குற்றஞ்சாட்டினார். அவர்களை கைது செய்யும் வரை எங்களது போராட்டம் தொடரும். பாஜக ஆட்சியில் குரல் எழுப்புபவர்கள் தண்டிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுகிறார்கள் என்றார். இந்த சம்பவங்களால் குஜராத்தில் பதற்றம் நிலவியது.