மும்பையில் இருந்து புறப்பட்ட ஆகாசா ஏா் விமானத்தில் பறவை மோதியதால் விமானம் மீண்டும் மும்பையிலேயே தரையிறக்கப்பட்டது.
மும்பையில் இருந்து பெங்களூருக்கு ஆகாசா ஏா் விமானம் இன்று புறப்பட்டது. ஆனால் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் அதில் பறவை மோதியது. இதனால் கேபினில் இருந்து புகை போன்ற வாசனை கிளம்பியதாக தெரிகிறது. உடனடியாக இதுதொடா்பாக விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு விமானிகள் தகவல் தெரிவித்தனா்.
இதையும் படிக்க- டிஆர்எஸ்-ல் இருந்து விலகினார் பூர நர்சய்யா கௌட்
இதையடுத்து, அந்த விமானம் மீண்டும் மும்பையிலேயே தரையிறக்கப்பட்டது. பின்னர் விமானத்தில் இருந்து அனைத்து பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். அதைத்தொடர்ந்து விமானம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. ஆய்வின் போது விமானத்தின் என்ஜின் எண் 1இல் பறவையின் எச்சங்கள் காணப்பட்டன.
மேலும் இதுதொடா்பாக விசாரணை நடத்த விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவத்தால் விமான நிலையத்தில் சற்று பரபரப்பு நிலவியது. ஆகாசா ஏர் நிறுவனம் தனது விமான சேவையை கடந்த ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி முதல் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.