பல்லாரி: சமூக வலைத்தளப் பக்கத்தில் வந்த தகவலைப் பார்த்த பெற்றோர், தங்களது உயிரிழந்த மகன் உயிர் பிழைக்க, உப்புக்குள் மகனின் உடலைப் புதைத்த விநோதம் நடந்தேறியுள்ளது.
கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டம் சிர்வார் கிராமத்தில், குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி பலியானார். அவரது உயிரை மீட்க, உப்பைக் கொட்டி மகனின் உடலை அதன் மீது வைத்து, மேலும் மகன் உடல் மூடும்படி உப்பைக் கொட்டி வைத்தனர்.
ஞாயிற்றுக்கிழமை குளத்தில் குளிக்கச் சென்ற சுரேஷ் என்ற 10 வயது சிறுவன் மூழ்கி உயிரிழந்தார். அப்போது, சமூக வலைத்தளம் ஒன்றில், உப்பில் உடலை புதைத்துவைத்தால் உயிர் பிழைக்கலாம் என்று வந்த பதிவை பெற்றோரும், கிராம மக்களும் உண்மை என நம்பி அவ்வாறே செய்துள்ளனர்.
இதையும் படிக்க.. என்ன ஆனது நித்யானந்தாவுக்கு? இலங்கைக்கு பறந்த அவசரக் கடிதம்
இது குறித்து சிறுவனின் உறவினர் கூறுகையில், அண்மையில், இப்படி ஒரு பதிவை அந்தச் சிறுவனின் பெற்றோர் படித்துள்ளனர். இந்த நிலையில்தான் தங்களது மகன் உயிரிழந்துவிட்டதால், அவனை மீட்க இவ்வாறு செய்ய முயன்றனர்.
இதற்காக நாங்கள் 10 கிலோ உப்பு வாங்கி வந்து சிறுவனின் உடலை அதில் மூடி வைத்தோம். சுமார் 6 மணி நேரம் காத்திருந்தும் எதுவும் நடக்கவில்லை.
இதுபற்றி கிராம மக்கள் காவல்துறைக்கும் மருத்துவர்களுக்கும் தகவல் தந்ததைத் தொடர்ந்து விரைந்து வந்த மருத்துவர்கள் சிறுவன் உயிரிழந்துவிட்டதை உறுதி செய்த நிலையில், கிராமத்தில் இருந்த இடுகாட்டில் சிறுவனின் இறுதிச் சடங்குகள் நடத்தி, உடல் எரியூட்டப்பட்டது.