ஜார்க்கண்ட் மாநிலத்தில் கிராம மக்களே அவர்களுக்கான பாலத்தை இரண்டே நாள்களில் கட்டி முடித்துள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சத்ரா மாவட்டத்தில் போகசடம் எனும் கிராமத்தில் 200 அடி நீளத்துக்கான பாலத்தை கட்டியுள்ளனர். அரசு செய்யாததை 200பேர் கொண்ட கிராம மக்கள் தன்னார்வத்துடன் இரண்டே நாள்களில் முடித்துள்ளனர். மூங்கில்கள், மரக்கட்டைகள், ஆணிகள், கயிறுகள், டயர்கள், போல்ட் மற்றும் நட்டுகளை மட்டுமே பயன்படுத்தி இந்த பாலத்தை கட்டி முடித்துள்ளனர்.
“மழைக்காலங்களில் எங்கள் கிராமம் தீவு போலாகிவிடும். குழந்தைகள் பள்ளிக்கு செல்லவும், வயலுக்கு போகவும், கால்நடை மேய்க்கவும் தடைபடுகிறதென கிராமத்தில் வசிக்கும் ஒருவர் கூறினார். 2-3 வருடத்திற்கு முன்னர் இந்த பிரச்சினை இல்லை. மழைக்காலங்களில்கூட நடந்து போகுமளவுக்கு குறைவான நீரே இருக்கும். ஆனால் கிராமத்தின் இரண்டு பக்கமும் இரண்டு அணைகளை கட்டியதால் ஆற்றில் நீரின் அளவு அதிகரித்தது. இதனால் எங்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. மேலும் அதிகமான விலை நிலங்கள் ஆற்றுக்கு அந்தப் பக்கமே இருக்கிறது ” என அந்த கிராமத்தின் ஆசிரியர் சந்தீப் குமார் கூறினார்.
இந்த பாலத்திற்கான செலவு ரூ. 4000 முதல் ரூ.5000தான் என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
“மாநில அரசும், மக்கள் பிரதிநிதிகளும் எங்களது துயரை கண்டுக்கொள்ளவில்லை. அதனால் நாங்களே இதை செய்து முடிக்க கையில் எடுத்தோம். எங்கள் கிராமத்தின் இளைஞர்கள் உதவியுடன் இரண்டே நாள்களில் பாலத்தை கட்டி முடித்தோம். 5 கிலோமீட்டர் சுற்றி போக வேண்டிய நிலை தற்போது இந்த பாலத்தின் மூலம் அரைக் கிலோமீட்டருக்கும் குறைவாக குறைந்துள்ளது” என கிராமத் தலைவி காஞ்சன் தேவி கூறினார்.