மனதின் குரல் 100வது நிகழ்ச்சியில் தமிழ்நாட்டு பெண்கள் குறித்து பிரதமர் மோடி பேசியுள்ளார்.
பிரதமா் மோடி, மனதின் குரல் நிகழ்ச்சி வாயிலாக கடந்த 2014, அக்டோபா் முதல் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறாா். பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசும் அவா், பல்வேறு மாநிலங்களில் சிறப்பாக செயலாற்றும் நபா்களை பாராட்டி, அவா்களது பணிக்கு அங்கீகாரம் வழங்குவதையும் வழக்கமாக கொண்டுள்ளாா். ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமையன்று காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மற்றும் தூா்தா்ஷனில் பிரதமரின் உரை
ஒலிபரப்பப்படுகிறது.
அந்த வகையில், பிரதமரின் 100-ஆவது ‘மனதின் குரல்’ உரை ஞாயிற்றுக்கிழமை (ஏப்.30) ஒலிபரப்பானது. பிரதமர் மோடியின் மனதின் குரல் உரையை, மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் உள்ளிட்டோர் கேட்டு மகிழ்ந்தனர். சென்னை ஆளுநர் மாளிகையில் 100ஆவது மனதின் குரல் நிகழ்ச்சியை மாணவர்களுடன் ஆளுநர் ஆர்என்.ரவி கேட்டார். ஆளுநர் ரவியுடன் பல்துறை முக்கிய பிரமுகர்களும் 100ஆவது மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்டனர்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகயைலும் 100ஆவது அத்தியாயத்தை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கேட்டு மகிழ்ந்தார். 100ஆவது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ஆற்றிய உரையில், நிகழ்ச்சி குறித்த நாட்டு மக்களின் கடிதங்களை படித்து பார்த்தேன். எனக்கு நெகிழ்ச்சியை கொடுத்தது. மனதின் குரல் நிகழ்ச்சி நேர்மறையான கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்ல மிகச்சிறந்த வழித்தடமாக இருந்திருக்கிறது.
இந்நிகழ்ச்சி மக்களின் நல்ல செயல்களை கொண்டாடக் கூடிய இடமாக இருக்கிறது. சாமானிய மக்களுடன் இணைவதற்கான ஒரு வழியை மனதின் குரல் நிகழ்ச்சி எனக்கு அளித்தது. ஒவ்வொரு முறை பேசும்போதும் நாட்டு மக்களிடமிருந்து விலகாமல் உடனிருப்பது போல் எண்ணம் வரும். 100ஆவது நிகழ்ச்சியை எட்டியதற்கு காரணமாக இருந்த நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துகள்.
தமிழக பழங்குடியினப் பெண்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த மண் குவளைகளை தயாரித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் 20ஆயிரம் பெண்கள் ஒன்றிணைந்து வேலூரில் உள்ள நாக் நதிக்கு புத்துயிர் அளித்தனர். மரம் நடுவது, நீர்நிலைகளை சுத்தம் செய்வது, குழந்தைகளின் கல்வி என பலர் குறித்து ஏற்கெனவே பேசியுள்ளேன். இந்த நிகழ்ச்சி நான் என்ற எண்ணத்தில் இருந்து நாம் என்ற எண்ணத்தை எனக்கு கொடுத்துள்ளது.
இயற்கை வளங்களான நீர்நிலைகள், மலைகள், புனிதத் தலங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வெளிநாடு சுற்றுலா செல்வதற்கு முன் நம் நாட்டில் உள்ள 15 இடங்களுக்கு நாம் செல்ல வேண்டும். சுத்தமான சியாச்சின், பிளாஸ்டி மற்றும் இ-கழிவுகள் ஆகியவை பற்றி தொடர்ந்து பேசி வருகிறோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.