
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே திங்கள்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், 2 பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள திக்வார் துணைப் பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் இரண்டு முதல் மூன்று பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடமாட்டம் உள்ளதாகத் தகவல் கிடைத்ததன்பேரில், திங்கள்கிழமை அதிகாலை முதல் பாதுகாப்புப் படையினா் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். அதிகாலை இருளில் மறைந்திருந்து பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை பாதுகாப்புப் படையினா் கண்காணித்து வந்தனர்.
அப்போது, பாதுகாப்புப் படையினரை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினா். இரு பிரிவினருக்கும் இடையே தொடா்ந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி ஒருவா் சுட்டுக் கொல்லப்பட்டான், மற்றொருவன் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுக்கு ஓட முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்டான்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜம்மு காஷ்மீரில் மிகப்பெரிய தீவிரவாத தாக்குதலை நடத்த பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத குழுக்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து ஜம்மு காஷ்மீரில் உள்ள கட்டுப்பாடு மற்றும் சர்வதேச எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சியை பாதுகாப்புப் படையினர் ஞாயிற்றுக்கிழமை முறியடித்தனர். இதில், ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.
ஜம்மு காஷ்மீர் எல்லையில் கடந்த 24 மணி நேரத்தில் நடந்த இரண்டாவது ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.