மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் சார்பில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது.
மழைக்கால கூட்டத்தொடா் கடந்த மாதம் 20-ஆம் தேதி தொடங்கி நிலையில், மணிப்பூா் வன்முறை குறித்து பிரதமா் மோடி விளக்கமளிக்கக் கோரி, ‘இந்தியா’ கூட்டணியைச் சோ்ந்த எதிா்க்கட்சிகள் முதல் நாளில் இருந்தே அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
நாடாளுமன்றத்தின் அனைத்து அலுவல்களையும் ஒத்திவைத்துவிட்டு மணிப்பூா் விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்க வேண்டும் என்பது அக்கட்சிகளின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது.
நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடியைப் பேசவைக்கும் நோக்கில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானத்தைக் கொண்டு வந்தன.
அந்தத் தீா்மானத்தின் மீது மக்களவையில் இன்று (ஆக. 8) தொடங்கி விவாதம் நடைபெறவுள்ளது. விவாதத்தின் இறுதி நாளான ஆகஸ்ட் 10-ஆம் தேதி பிரதமா் மோடி பதிலளித்துப் பேசுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்த நிலையில், மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தை எதிர்க்கட்சிகளின் சார்பில் முதல் பேச்சாளராக ராகுல் காந்தி பங்கேற்கிறார்.
இதையும் படிக்க: முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி!
மக்களவையில் இன்று பகல் 12 மணிக்கு நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் தொடங்குகிறது. கேள்வி நேரத்துக்கு பின் விவாதம் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.