மக்களவையில் பேசி வரும் பிரதமர் மோடி மணிப்பூர் குறித்து பேசாததைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது மக்களவையில் மூன்றாவது நாளாக இன்று(வியாழக்கிழமை) விவாதம் நடைபெற்றது.
தொடர்ந்து இன்று மாலை 5 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பதிலுரை அளித்துப் பேசி வருகிறார்.
இதையும் படிக்க | தொடர்ந்து நோ பால் போடும் எதிர்க்கட்சிகள்: பிரதமர் மோடி பதிலுரை
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசி வரும் பிரதமர் மோடி இதுவரை மணிப்பூர் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. பாஜக அரசின் சாதனைகள் குறித்தும் எதிர்க்கட்சிகளை குறிப்பாக காங்கிரஸை விமரிசித்தும் பேசி வருகிறார்.
இதையடுத்து, மணிப்பூர் குறித்து பிரதமர் மோடி பேச வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் 'மணிப்பூர்.. மணிப்பூர்..' என தொடர்ந்து முழக்கமிட்டு வருகின்றனர். எனினும் பிரதமர் மோடி தனது உரையைத் தொடர்ந்து வருகிறார்.
இந்நிலையில் பிரதமர் மோடி மணிப்பூர் குறித்து பேச முன்வராததைக் கண்டித்து எதிர்க்கட்சி எம்.பி. க்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
முன்னதாக, மணிப்பூர் குறித்து பிரதமர் மோடி பேச வேண்டும் என்பதற்காகவே இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தோம் என்று எதிர்க்கட்சிகள் கூறியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | 2028 ஆம் ஆண்டிலும் நம்பிக்கையில்லா தீர்மானம்: பிரதமர் மோடி பேச்சு