பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வந்து மணிப்பூர் பிரச்னை குறித்து பேச வேண்டும் என்பதே இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் நோக்கம் என காங்கிரஸ் மக்களவைக் குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி தெரிவித்தார்.
மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது மக்களவையில் மூன்றாவது நாளாக இன்று விவாதம் நடைபெற்று வருகிறது.
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை பேசிய நிலையில் தற்போது காங்கிரஸ் மக்களவைக் குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி பேசி வருகிறார்.
அப்போது, 'நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று பிரதமரை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்து சேர்த்துள்ளது. இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து நாங்கள் யாரும் யோசிக்கவில்லை. பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வந்து மணிப்பூர் பிரச்னை குறித்து பேச வேண்டும் என்றுதான் நாங்கள் கோரிக்கை விடுத்தோம். நாங்கள் எந்த பாஜக உறுப்பினரையும் நாடாளுமன்றத்திற்கு வருமாறு கோரவில்லை, பிரதமரை மட்டுமே வருமாறு நாங்கள் கோரினோம்' என்று பேசினார்.
ஆதிர் ரஞ்சன் சௌத்ரி பேசிக்கொண்டிருக்கும்போதே பிரதமர் நரேந்திர மோடியும் மக்களவைக்கு வருகை தந்துள்ளார். அவருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 4 மணிக்குப் பதிலளிக்க உள்ளார்.
இதையும் படிக்க | ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி