சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தில்லி அரசு அதிகாரியை இடைநீக்கம் செய்து முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உத்தரவிட்டுள்ளார்.
தில்லியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் துணை இயக்குநராக இருந்த பிரமோதய் காக்கா(Premoday Khakha), தனது நண்பரின் மகளை பல மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமியின் தந்தை இறந்த நிலையில், தந்தையின் நண்பரான அதிகாரியின் வீட்டில் தங்கியுள்ளார் சிறுமி. கடந்த 2020, நவம்பா் மற்றும் 2021 ஜனவரி -க்கு இடையில் சிறுமியை பல மாதங்களாக தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமடையச் செய்துள்ளார். அதிகாரியின் மனைவியிடம் இதுகுறித்து சிறுமி தெரிவித்த நிலையில், தனது மகனை மாத்திரைகள் வாங்கச் சொல்லி சிறுமியின் கர்ப்பத்தைக் கலைத்துள்ளார்.
தற்போது 12 ஆம் வகுப்பு படித்து வரும் அந்த சிறுமியை காண வந்த தாயிடம், சிறுமி விவரத்தைச் சொல்ல காவல்துறையிடம் புகார் தெரிவிக்கப்பட்டு அதிகாரி மற்றும் அவரது மனைவி மீது கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி புராரி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்டவரை விரைவில் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தில்லி காவல்துறைக்கு தில்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் விசாரணை முடிவடையும்வரை, குற்றம்சாட்டப்பட்ட பிரமோதய் காக்காவை இடைநீக்கம் செய்து முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இன்று மாலை 5 மணிக்கு இது தொடர்பான அறிக்கை ஒன்று தரவும் தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளதாகக் கூறினார்.