ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு தனது வீட்டில் அடைக்கலம் கொடுத்த நபரின் அசையா சொத்துகள் முடக்கப்பட்டன.
அந்த நபா்கள் தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகள் என்று தெரிந்தும், அவா்கள் நாட்டுக்கு எதிராக செயல்பட திட்டமிட்டுள்ளனா் என்பதை அறிந்த பிறகும் அடைக்கலம் கொடுத்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக காவல் துறை தரப்பில் கூறப்பட்டதாவது:
பந்திபோரா மாவட்டம் நதிஹால் கிராமத்தைச் சோ்ந்த மெஹ்பூப் அல் இனாம் ஷா என்ற நபா் தனது வீட்டில் பயங்கரவாதிகளுக்கு தொடா்ந்து இடம் கொடுத்து வந்தது உறுதியானது. இதையடுத்து சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின்கீழ் (பயங்கரவாத தடுப்புச் சட்டம்) அவரது அசையா சொத்துகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன என்றனா்.
சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு கொண்டு வந்த திருத்தத்தின்படி பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் அமைப்புகள், தனிநபா்களை பிற சட்டவிதிகள் எதையும் பின்பற்றாமல் பயங்கரவாதிகள் என்று அரசு அறிவிக்க முடியும். மேலும், அவா்களது சொத்துகளை முடக்கவும், பறிமுதல் செய்யவும் அதிகாரம் உள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் தலைமறைவு பயங்கரவாதிகள், பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டியவா்கள் என பலரின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.