இந்துத்துவா அமைப்புகளின் யாத்திரையையொட்டி ஹரியாணாவின் நூ மாவட்டத்தில் இரு நாள்களுக்கு இணைய சேவைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நூ மாவட்டத்தில் கடந்த ஜூலை 31-ஆம் தேதி நடைபெற்ற விஸ்வ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) ஊா்வலத்தின் மீது சிலா் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால், அங்கு இரு சமூகத்தினரிடையே மதக் கலவரம் மூண்டது. அருகிலுள்ள குருகிராம் மாவட்டம் சோனா நகருக்கும் கலவரம் பரவியதால் 6 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் காயமடைந்தனர்.
இதையும் படிக்க | எண்ம பணப்பரிவர்த்தனை: குரல் மூலமாக பணம் அனுப்பும் வசதி! விரைவில்...
இந்நிலையில் வருகிற ஆகஸ்ட் 28 ஆம் தேதி இந்துத்துவா அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு ஊர்வலம் நடத்தத் திட்டமிட்டுள்ளது. இதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்தும், ஊர்வலத்தை நடத்துவோம் என்று அந்த அமைப்பினர் திட்டவட்டமாக கூறி வருகின்றனர்.
இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பு கருதி நூ நகரில் மொபைல் இணைய சேவை மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளுக்கு இரண்டு நாள்களுக்கு தடை விதிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இன்று நண்பகல் 12 மணி முதல் ஆக. 28 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை இணைய சேவை துண்டிக்கப்படுகிறது.
சமூக ஊடகங்கள் மூலம் தவறான தகவல் மற்றும் வதந்திகள் பரவுவதை தடுக்கும் முயற்சியில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.