நாட்டு மக்கள் அனைவரின் முயற்சியாலும் சந்திரயான் 3 திட்டத்துக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
104வது மனதின் குரல் நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, செப்டம்பரில் நடைபெறவுள்ள ஜி20 உச்சி மாநாட்டிற்கு இந்தியா முழுவதுமாக தயாராக உள்ளது. ஜி20 தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுக்கொண்டதில் இருந்து உலக நாடுகளில் நமக்கு பெருமை கிடைத்துள்ளது. ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி நாட்டிற்கு பெருமை சேர்க்க அனைவரும் ஒன்று சேர வேண்டும்.
ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்க 40 நாடுகளின் தலைவர்கள், உலக அமைப்புகளின் தலைவர்கள் இந்தியா வருகின்றனர். சீனாவில் நடந்த உலக பல்கலை. விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சந்திரயான்-3 இன் வெற்றி மிகப் பெரியது, அதைப் பற்றி எவ்வளவு விவாதித்தாலும் போதாது. பெண்களின் திறன் சேர்க்கப்படும் போது, சாத்தியமற்றது சாத்தியமாகும்.
இந்தியாவின் திட்டமான சந்திரயான் பெண் சக்திக்கு வாழும் உதாரணம். நாட்டு மக்கள் அனைவரின் முயற்சியாலும் சந்திரயான் 3 திட்டத்துக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. சந்திரயான் 3 வெற்றியில் நமது விஞ்ஞானிகளுடன், மற்ற துறைகளும் முக்கியப் பங்காற்றியுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.