புது தில்லி: ஆம் ஆத்மி கட்சி மக்களிடையே கையெழுத்து இயக்கத்தை வெள்ளிக்கிழமை தொடங்கியது.
பாஜகவின் சதியால் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டால் அவர் பதவியில் தொடரலாமா அல்லது பதவி விலக வேண்டுமா என மக்களின் கருத்தைக் கேட்பதற்கு ’மை பீ கேஜரிவால் (கேஜரிவால் இருக்கலாம்) என்கிற இயக்கத்தை ஆம் ஆத்மி கட்சி தொடங்கியுள்ளது.
முன்னதாக, தில்லி அரசின் கலால் கொள்கை ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் விசாரிக்க முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இந்த விசாரணைக்கான அழைப்புச் ‘சட்டத்திற்கு புறம்பானது மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டது’ என விசாரணைக்குச் செல்ல கேஜரிவால் மறுத்துள்ளார்.
இந்த நிலையில், அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டால் அவர் முதல்வர் பதவியிலிருந்து விலக வேண்டுமா அல்லது சிறையில் இருந்து ஆட்சியை வழிநடத்த வேண்டுமா என்பது குறித்து மக்களிடம் கருத்துக் கேட்க இந்த முன்னெடுப்பை ஆம் ஆத்மி தொடங்கியுள்ளதாக கட்சித் தலைவர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.
கிழக்கு தில்லி சட்டப் பேரவைத் தொகுதியில் இந்த முன்னெடுப்பைத் தொடங்கி வைத்த அவைத் தலைவர் மக்களிடம் நேரடியாக இது குறித்துக் கேட்டறிந்தார்.
”அரவிந்த் கேஜரிவால் மீது பாஜக நடத்தும் சதி குறித்து மக்களிடையே கடும் அதிப்ருதி நிலவுகிறது. இத்தனை நல்ல பணிகளைச் செய்கிற முதல்வரை ஏன் பாஜக கைது செய்ய வேண்டும் என மக்கள் கேட்கின்றனர்” என ராய் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க: ராஜஸ்தானில் கடும் பனிப்பொழிவு!
இந்த இயக்கத்தில், ஆம் ஆத்மி தன்னார்வலர்கள் தில்லியில் உள்ள 2600 வாக்குச் சாவடிகளிலும் மக்களை நேரில் சந்தித்து அவர்களின் கருத்தைக் கேட்கவுள்ளனர்.