மத்திய ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏறத்தாழ 97.26 சதவீத 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்குத் திரும்பி விட்டதாகவும் இன்னும் 9,760 கோடி ரூபாய் மதிப்பிலான நோட்டுகள் மட்டுமே மக்களிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளைத் திரும்ப பெறுவதாக ஆர்பிஐ வங்கி மே, 19 அன்று அறிவித்தது.
“மே 19, 2023 தேதியில் ரூபாய் 3.56 லட்சம் கோடி மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்தன. இந்த நோட்டுகள் திரும்ப பெறுவதாக அறிவித்த பிறகு நவம்பர் 30-ம் தேதியின் முடிவில் 9,760 கோடி ரூபாய்க்கான நோட்டுகள் மக்களிடம் மீதம் உள்ளன” என மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு செப்.30 ஆக இருந்தது பின்னர் அக். 7 வரை நீடிக்கப்பட்டு அது முடிவடைந்தது. இந்த நிலையில் 2000 ரூபாய் தாள்களை மாற்ற விரும்புபவர்கள் மத்திய ரிசர்வ் வங்கியின் 19 அலுவலகங்களையும் அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்திய அஞ்சல் நிலையங்கள் மூலமாகவும் மக்கள் தங்களிடம் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை அனுப்பி அவர்களின் வங்கி கணக்குகளில் வரவு வைத்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க: ஏர் இந்தியா விமானத்துக்குள் மழை பெய்யும் விடியோவால் பரபரப்பு
2016-ம் ஆண்டு நவம்பரில் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் பணமதிப்பிழப்பு செய்யப்பட்டதும் அதற்கு மாற்றாக ரூ. 2000 நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.