தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய இலச்சினைக்கு இந்திய மருத்துவக் கூட்டமைப்பின் கேரள பிரிவு கண்டனம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய இலச்சினையை வெளியிடப்பட்டது. அதில் இந்து கடவுளின் உருவத்துடன், இந்தியா என்ற பெயர் பாரத் என்று மாற்றப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அந்த இலச்சினைக்கு இந்திய மருத்துவக் கூட்டமைப்பின் கேரள பிரிவு கண்டனம் தெரிவித்து கூறியுள்ளதாவது, “தற்போது வெளியிடப்பட்டுள்ள இலச்சினையானது நாட்டின் மதச்சார்பற்ற தன்மைக்கு எதிரானதாகும். மதத்தில் இருந்து அறிவியல் விலகியிருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.
இந்திய மருத்துவக் கூட்டமைப்பின் கேரள மாநிலத் தலைவர் சுல்பி நூஹு அவரது முகநூல் பக்கத்தில் கூறியதாவது: “அனைத்து மதம் மற்றும் ஜாதியினரையும் சமமாக நடத்துவதே இந்திய மருத்துவக் கூட்டமைப்பின் கொள்கையாகும். இந்த அமைப்பின் தேசியத் தலைமை இந்த இலச்சினை மாற்றம் குறித்து கடுமையான எதிர்ப்பை பதிவு செய்யும்” என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | மந்திரப் பெட்டி! பெண்ணிடம் ரூ.3.5 கோடி மோசடி செய்த பாதிரியார் கைது
மேலும் இதுகுறித்து தேசிய மருத்துவ ஆணையத்தின் தலைவருக்கு கடிதமும் எழுதியுள்ளது. அதில், “இந்த இலச்சினை மாற்றம் ஏற்றுக் கொள்ள முடியாதது. நவீன மருத்துவ அறிவியலுக்கும் எதிரானது. எனவே இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை தேவை” என்று கூறியுள்ளது.