தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஞாயிற்றுக்கிழமை காலை புயலாக வலுப்பெற்றது. ‘மிக்ஜம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள புயல் சென்னைக்கு தென் கிழக்கே சுமாா் 88 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘மிக்ஜம்’ புயல் காரணமாக சென்னையில் விடிய விடிய சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலைகள், தண்டவாளங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.
இந்த நிலையில், மிக்ஜம் புயல் ஆந்திரத்தைக் கடக்க உள்ளதால் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி புயலால் கனமழை பெய்ய உள்ள திருப்பதி, நெல்லூர், பிரகாசம், பாபட்லா, கிருஷ்ணா, மேற்கு கோதாவரி, கோணசீமா, காக்கிநாடா ஆகிய 8 மாவட்டங்களில் 181 நிவாரண முகாம்களை அமைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுகுறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அம்மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
மிக்ஜம் புயல் இன்று இரவு ஆந்திரத்தை நெருங்கும் என்பதால் பொது மக்களுக்கு அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளன.
இதையும் படிக்க: மிக்ஜம் தாண்டவம்! - புகைப்படங்கள்