மத்திய அரசு மாநிலதுக்குத் தர வேண்டிய நிதி நிலுவைகளைக் கோருவதற்காக பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
பாக்டோக்ரா விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நாட்டின் தலைநகருக்குப் பயணிக்கவுள்ளதாகவும் டிச.18 முதல் டிச.20-ம் தேதிக்குள் பிரதமரைச் சந்திக்க அனுமதி கேட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அவர், “சில எம்பிக்களுடன் நான் தில்லி செல்லவுள்ளேன். மத்திய அரசு எங்களுக்குத் தர வேண்டிய நிலுவை தொகையைக் கேட்டுப் பெறுவதற்காக இந்த மாதத்தில் 18, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் பிரதமரைச் சந்திக்க அனுமதி கேட்டிருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
மத்திய அரசு மாநிலத்திடமிருந்து ஜிஎஸ்டி வரிகளை வசூலித்து கொள்வதாகவும் ஆனால் மாநிலத்துக்குச் சேர வேண்டிய நிலுவை தொகையை உரிய நேரத்தில் தருவதில்லையென்றும் மம்தா குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதையும் படிக்க: இங்கு விவசாயிகளை விட தற்கொலை செய்யும் மாணவர்கள் அதிகம்
தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் உள்பட பல மத்திய அரசின் திட்டங்களில் நிதி தரப்படுவதில்லை. மாநிலங்கள், மத்திய அரசின் நிதி நிலுவையால் தடுமாறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மேற்கு வங்கத்தில், ஒரு வார சுற்று பயணத்தில் மம்தா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.