இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் மக்களவையில் போராட்டம்!

நாடாளுமன்ற மக்களவையில் அமர்ந்து இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 
இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் மக்களவையில் போராட்டம்!

நாடாளுமன்ற மக்களவையில் அமர்ந்து இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

மக்களவையில் நேற்று(புதன்கிழமை) பாா்வையாளா்கள் மாடத்தில் இருந்த இரண்டு இளைஞா்கள், எம்.பி.க்கள் அமரும் பகுதிக்குள் குதித்து புகைக் குப்பிகளை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஒரு பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் நாடாளுமன்ற பாதுகாப்பு விதிமீறல் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள், இன்று(வியாழக்கிழமை) அவை தொடங்கியது முதலே கோஷமிட்டு அமளியில் ஈடுபட்டு வந்தனர். 

இதையடுத்து, கடும் அமளியில் ஈடுபட்டதாக, ஒழுங்கற்ற நடவடிக்கை காரணமாக, மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ், டி.என்.பிரதாபன், ஹிபி இடன், டீன் குரியகோஸ் ஆகிய 5 பேரை முதலில் இடைநீக்கம் செய்வதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி. அறிவித்தார். 

இதன் தொடர்ச்சியாக மேலும் 9 எம்.பி.க்கள் மக்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். தமிழக எம்.பி.க்கள் கனிமொழி, சு. வெங்கடேசன், மாணிக்கம் தாகூர், கே. சுப்பராயன் மற்றும் பென்னி பெஹனன், வி.கே. ஸ்ரீகந்தன், முகம்மது ஜாவத், பி.ஆர். நடராஜன், எஸ்.ஆர். பிரதீபன் என 9 எம்.பி.க்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து தொடர் அமளி காரணமாக மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. 

எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு மற்ற எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இதையடுத்து மக்களவையில் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் மக்களவை உள்ளே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களுக்கு நீதி வேண்டும், நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டு வருகின்றனர். 

முன்னதாக, இன்று காலை மாநிலங்களவையில் தொடர் அமளியில் ஈடுபட்டதற்காக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இன்று ஒரேநாளில் மக்களவையில் 14 எம்.பி.க்கள், மாநிலங்களவையில் ஒருவர் என 15 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 9 பேர் காங்கிரஸ், 2 பேர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், 2 பேர் திமுக, ஒருவர் இந்திய கம்யூனிஸ்ட், ஒருவர் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com