மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து மஹுவா மொய்த்ரா நீக்கப்பட்டதற்கு எதிரான வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் ஜன. 3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து.
மக்களவையில் அதானி குழுமத்துக்கு எதிராகக் கேள்வி எழுப்ப, தொழிலதிபா் தா்ஷன் ஹீராநந்தானியிடம் இருந்து திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா லஞ்சம் வாங்கியது தொடா்பான குற்றச்சாட்டில் மக்களவை நெறிமுறைகள் குழு விசாரணை நடத்தி, தனது அறிக்கையை கடந்த நவ. 9-ஆம் தேதி வெளியிட்டது.
அதில், மஹுவா மொய்த்ராவைப் பதவிநீக்கம் செய்யப் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் டிச. 8 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு குரல் வாக்கெடுப்பின் மூலமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, மக்களவை உறுப்பினா் பதவியிலிருந்து மஹுவா மொய்த்ரா நீக்கம் செய்யப்பட்டாா்.
இதையும் படிக்க | திரிணமூல் எம்.பி. மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம்!
பின்னர், மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தான் நீக்கப்பட்டதற்கு எதிராக மஹுவா மொய்த்ரா உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தார். தனது மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.
அதன்படி வழக்கு இன்று(வெள்ளிக்கிழமை) நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எஸ்.வி.என். பாட்டி முன்பாக விசாரணைக்கு வந்தது. மஹுவா மொய்த்ரா தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி ஆஜரானார்.
முதற்கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில் வழக்கு ஜன. 3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நாளை(டிச. 16) முதல் உச்சநீதிமன்றத்திற்கு குளிர்கால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.